ஸ்லிடெல்: நிர்வாணப் படங்களை அனுப்பியது, மதுக்கூடங்களில் மாணவர்களுக்கு மது வாங்கித் தந்தது, குறைந்தது ஒரு மாணவருடன் பாலியல் உறவு கொண்டிருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
அலெக்சா விங்கர்டர், 35, அவர்களுடைய ஆண் மாணவர்களுடன் “தகாத உறவுகளைக் கொண்டிருப்பது” குறித்த புகார்கள் எழுந்த பின்னர் மார்ச் மாதத்தில் அவர் முதன்முதலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக அமெரிக்காவின் லூசியானா மாநிலம், ஸ்லிடெல் காவல்துறையினர் தெரிவித்தனர்.
விங்கர்டர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
“மாணவரின் கல்வியாளர் என்ற முறையில் செயல்பட்ட விங்கர்டர், 18 வயதுடைய குறைந்தது ஓர் ஆண் மாணவனுடன் தகாத மற்றும் பாலியல் உறவில் ஈடுபட்டதற்கான போதுமான ஆதாரங்களை விசாரணையாளர்கள் கண்டுபிடித்தனர்,” என்று ஸ்லிடெல் காவல்துறை கூறியது.
ஸ்லிடெலில் உள்ள மதுக்கூடங்களில் தம்முடைய மாணவர்களுக்கு விங்கர்டர் மது வாங்கிக் கொடுத்ததற்கான ஆதாரமும் கண்டறியப்பட்டது.
விங்கர்டர் என்ன பாடம் சொல்லித் தந்தார் என்பது பற்றித் தெரியவில்லை. அவர் இனி ஆசிரியர் பணியில் இல்லை என்பதைப் பள்ளி நிர்வாகம் உறுதிப்படுத்தியது.
ஸ்லிடெல் அமைந்துள்ள செயின்ட் டாம்மனி பாரிஷ் பள்ளி மாவட்டம், கிட்டத்தட்ட 40,000 மாணவர்களுக்குக் கல்வி வழங்குகிறது.
“பொருத்தமற்ற நடத்தை குறித்த எந்தவொரு குற்றச்சாட்டும் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலும் அதுநேரடியாக சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படுகிறது,” என்று பள்ளி நிர்வாகம் கூறியது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடர்கிறது.