கோலாலம்பூர்: மலேசியாவில் சளிக்காய்ச்சல் காரணமாகக் கிட்டத்தட்ட 6,000க்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுக் கல்வி அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.
பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில பள்ளிகள் மூடப்பட்டதாக அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
“கொவிட்-19 காலத்தில் கற்றுக்கொண்ட அனுபவம் இப்போது கைகொடுக்கிறது. காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன,” என்று மலேசியக் கல்வி அமைச்சின் தலைமை இயக்குநர் முகம்மது அசாம் அகமது கூறினார்.
பாதுகாப்பு விதிமுறைகளைப் பள்ளிகள் பின்பற்ற வேண்டும். பள்ளிகளில் முகக்கவசம் அணிய வேண்டும், பெரிய குழுக்களாகச் செய்யும் நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
எத்தனை பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பது குறித்து திரு முகம்மது குறிப்பிடவில்லை. ஆனால், சளிக்காய்ச்சல் சம்பவங்கள் மலேசியாவின் பல பகுதியில் பரவியிருப்பதாக அவர் கூறினார்.
கடந்த வாரம் மலேசியச் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையின்படி அந்நாட்டில் 97 நோய்ப்பரவல் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. பள்ளிகள் மற்றும் பாலர் பள்ளிகளில் அதிக அளவில் நோய்ப்பரவல் பகுதிகள் பதிவாகியுள்ளன.