ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ஜகார்த்தா நகர நிர்வாகம், பொது இடங்களில் புகை பிடிக்காமல் இருக்கப் புதிய விதிமுறைகளையும் சட்டங்களையும் இயக்கவுள்ளது.
பொது இடங்களில் புகை பிடிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் குறிப்பாகக் குழந்தைகள் கர்ப்பிணிகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்பதால் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக ஜகார்த்தா நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக அலுவலகங்கள், கடைத் தொகுதிகள் உள்ளிட்ட மக்கள் கூட்டம் அதிகம் சேரும் இடங்களில் புகை பிடிப்பதைக் கட்டுப்படுத்தப் போவதாக ஜகார்த்தா ஆளுநர் பிரமோனோ அனுங் கூறினார்.
“அலுவலகங்கள், கடைத் தொகுதிகளில் முற்றிலுமாகப் புகை பிடிக்கத் தடை விதிக்கப்போவதில்லை. அந்தக் கட்டடங்களில் புகை பிடிக்க எனத் தனி இடம் ஒதுக்கப்படும்,” என்றார் திரு அனுங்.
கரோக்கே நிலையங்கள், இரவு விடுதிகள், பொழுதுபோக்கு கூடங்கள் உள்ளிட்ட இடங்களிலும் புகை பிடிக்கக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என்றார் அவர்.
தோக்கியோ, சோல் உள்ளிட்ட நகரங்களில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய திரு அனுங், “இந்த நடவடிக்கைகள் சுத்தமான மற்றும் நல்ல பொதுச் சுகாதாரத்தை உண்டாக்கும்,” என்று குறிப்பிட்டார்.
ஜகார்த்தாவின் சுகாதார நிலையங்கள், பள்ளிகள், விளையாட்டுத் திடல்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுப் போக்குவரத்து, விளையாட்டு நிலையங்கள் ஆகியவற்றில் முழுமையாகப் புகைபிடிக்கத் தடை விதிக்கத் தற்போது சட்ட வரைவு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அதன் தன்மையைப் பொறுத்து 4,000 வெள்ளிவரை அபராதம் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.