கெய்ரோ: காஸாவில் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் சென்ற லாரிகளிலிருந்து உணவுப்பொருள்களை எடுத்துக்கொண்டிருந்த பாலஸ்தீனர்களை இஸ்ரேலியக் கவசவாகனங்கள் குறிவைத்து தாக்கியதில் குறைந்தது 59 பேர் மாண்டனர்.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) நிகழ்ந்தது.
கான் யூனிஸ் பகுதியில் உள்ள சாலையில் பல சடலங்கள் கிடப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் வலம் வந்தது.
அப்பகுதியில் தனது கவசவாகனங்கள் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக அது தெரிவித்தது.
குறைந்தது 59 பேர் மாண்டதாகவும் 221 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன மருத்துவ உதவியாளர்கள் கூறினர்.
அவர்களில் குறைந்தது 20 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
காயமடைந்தோர் கார்கள், ரிக்ஷா, கழுதை வண்டிகள் ஆகியவை மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.