டெஹ்ரான்: ஈரான் சரண் அடையப்போவதில்ல என்று அந்நாட்டின் தலைவர் அயத்துல்லாஹ் அலி காமெனெய் சூளுரைத்துள்ளார்.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் ஆறாவது நாளாக நீடித்துவரும் போரில் அந்நாடு அதிவேக ஏவுகணைகளைப் பாய்ச்சியுள்ளது.
டெஹ்ரானில் ஈரானின் உள்நாட்டுப் பாதுகாப்பு செயலகத்தைத் தான் அழித்து விட்டதாக ஈஸ்ரேல் அறிவித்த சில மணி நேரங்களில் ஏவுகணைகளை ஈரான் பாய்ச்சியது.
தனது நாட்டின் ஏவுகணைகளையும் கிடங்குகளையும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் ஈரான் தெரிவித்தது.
இந்த மோதலில் தலையிடாதபடியும் அயத்துல்லாஹ் காமெனெய் அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.
சில நாள்களுக்கு முன்னர் டெஹ்ரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கோரியதை அடுத்து ஈரானின் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
திரு டிரம்ப்பின் கோரிக்கை ஏற்கத் தகாதது என்று கூறிய அயத்துல்லாஹ் காமெனெய், ஈரான் என்றும் சரண் அடையாது என்று அவர் தொலைக்காட்சி உரை ஒன்றில் கூறினார்.
“எந்த ராணுவத் தலையீடும் சரிசெய்யமுடியாத சேதத்தை விளைவிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று அமெரிக்கா தெரிந்திருக்கவேண்டும்,” என்று அயத்துல்லாஹ் கூறினார்.