ஜகார்த்தா: இந்தோனீசியாவில் உள்ள லெவோட்டோபி லாக்கி லாக்கி எரிமலை புதன்கிழமை (அக்டோபர் 15) வெடித்தது. எரிமலை வெடித்ததில் அதிலிருந்து சாம்பல் வானுயர 10 கிலோமீட்டர் உயரத்துக்குத் தூக்கி வீசப்பட்டது.
இந்நிலையில், அதிகாரிகள் ஆக உயரிய நிலை எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
லெவோட்டோபி லாக்கி லாக்கி எரிமலை கிழக்கு நூசா தெங்காரா மாநிலத்தில் உள்ளது.
இந்தோனீசிய நேரப்படி அது அதிகாலை 1.35 மணிக்கு வெடித்ததாக அதிகாரிகள் கூறினர். வெடிப்பு கிட்டத்தட்ட ஒன்பது நிமிடங்களுக்கு நீடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இத்தகவலை இந்தோனீசியாவின் புவியியல் ஆணையம் வெளியிட்டது.
எரிமலை வெடிப்புக்குப் பிறகு கனமழை தொடர்ந்தால் அப்பகுதியில் பேரளவில் சேறு சரிந்து வரும் என்று எரிமலைக்கு அருகில் வசிக்கும் கிராமவாசிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எரிமலையிலிருந்து 6 கிலோமீட்டர் முதல் ஏழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பகுதிகளுக்கு யாரும் செல்லக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு அந்த எரிமலை கடந்த ஆகஸ்ட் மாதம் வெடித்தது.
தொடர்புடைய செய்திகள்
ஜூலை மாதத்திலும் அது வெடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, அதன் விளைவாக அருகில் உள்ள பாலித் தீவில் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.