ஜகார்த்தா: சிறையில் இருக்கும் பிரிட்டிஷ் குடிமக்கள் இருவரைத் தாயகத்திற்குத் திருப்பியனுப்ப இந்தோனீசியா இணங்கியுள்ளது.
அதற்கான உடன்பாட்டில் ஜகார்த்தாவும் லண்டனும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) கையெழுத்திட்டன. போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட பாட்டியும் அவர்களில் ஒருவர் என்று இந்தோனீசியாவின் மூத்த சட்ட, மனித உரிமை அமைச்சர் யுஸ்ரில் இஹ்ஸா மகேந்திரா கூறினார்.
கிட்டத்தட்ட 70 வயது மதிக்கத்தக்க லின்சே சேண்டிஃபோர்டுக்கு போதைப்பொருள் கடத்தலுக்காக 2013ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தோனீசியாவின் பாலி தீவில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2012ல் தாய்லாந்திலிருந்து பாலிக்கு விமானத்தில் வந்த சேண்டிஃபோர்டின் பயணப்பெட்டியின் கீழ்ப்பகுதியில் 2.14 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமான கொக்கெய்ன் போதைப்பொருளைச் சுங்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட சேண்டிஃபோர்ட், போதைப்பொருள் கும்பலொன்று அவரது மகனைக் கொல்லப்போவதாக மிரட்டியதைத் தொடர்ந்து அதைக் கடத்த இணங்கியதாகச் சொன்னார்.
2013ல், மரணதண்டனைக்கு எதிராக அவர் செய்த மேல்முறையீடு தோல்வியில் முடிந்தது.
சேண்டிஃபோர்டுடன் பிரிட்டனுக்குத் திருப்பி அனுப்பப்படும் இன்னொருவர் போதைப்பொருள் குற்றங்களுக்காக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 35 வயது ஷஹாட் ஷஹாபாடி. 2014ல் அவர் கைதானார்.
கைதிகள் இருவரும் கடும் மருத்துவப் பிரச்சினைகளால் அவதியுறுகின்றனர்.