வாஷிங்டன்: அமெரிக்காவின் குடிநுழைவு, சுங்கத்துறை மத்திய அமலாக்க அதிகாரிகள் நடத்திய சோதனையில் பலர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோசுலும் குடியேறிகளுக்காக வாதாடும் குழுவினரும் தெரிவித்துள்ளனர்.
காட்டோ, ஃபுல்டன் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
“அதிகாரிகள் நடத்திய சோதனையில் 40க்கும் அதிகமான பெரியவர்கள் கைது செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது,” என்று திருவாட்டி ஹோசுல் சொன்னார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின்கீழ் உள்ள குடிநுழைவு, சுங்கத்துறை, குடியேறிகளை அமெரிக்காவிலிருந்து அப்புறப்படுத்தும் பணியைச் செய்து வருகின்றது. அதற்கென இதுவரை இல்லாத அளவில் நிதியும் சோதனைகளை நடத்த புதிய அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளன.
திரு டிரம்ப் ‘மோசமான’ குற்றவாளிகளை நாடுகடத்தப்போவதாகக் கூறியபோதும் குற்றம் புரியாதோர் அதிகம் குறிவைக்கப்படுவதைக் குடிநுழைவு, சுங்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டவர்களின் புள்ளிவிவரங்கள் காண்பிக்கின்றன.
சத்துணவுப் பொருள் தயாரிக்கப்படும் தொழிற்சாலை ஒன்றில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைக்குப் பின் 70க்கும் அதிகமான ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டதாக ரூரல் அண்ட் மைகிரெண்ட் மினிஸ்ட்ரி என்ற அமைப்பு ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
திரு டிரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆகப் பெரிய அளவிலான சோதனை சத்துணவுப் பொருள் தொழிற்சாலையில்தான் இடம்பெற்றது என நியூயார்க் டைம்ஸ் நாளேடு குறிப்பிட்டது.
“அமெரிக்க எல்லையைப் பாதுகாத்து அதிக வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளை நாட்டைவிட்டு வெளியேற்ற நியூயார்க் மாநிலம் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயல்படும். ஆனால், குடும்பங்களைப் பிரித்து பிள்ளைகளை ஆதரவின்றித் தவிக்கவிடும் சூழல் ஏற்படுவதற்கு நான் ஒருபோதும் துணை நிற்கமாட்டேன்,” என்று திருவாட்டி ஹோசுல் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
ஃபுல்டன் வட்டாரத்தில் நடைபெற்ற சோதனை நடவடிக்கை பற்றி உடனடி தகவல்கள் இல்லை என்றபோதும் அத்தகைய சோதனைகள் நியூயார்க்கைப் பாதுகாப்பாக வைத்திருக்கபோவதில்லை என்றார் அவர்.
கடினமாக உழைத்து தங்கள் வாழ்க்கையை இங்கு அமைத்துக்கொள்ள விரும்பும் குடும்பங்களைத் தான் அதிகாரிகள் சிதைக்கின்றனர் என்றார் திருவாட்டி ஹோசுல்.
இதற்கிடையே, ஜார்ஜியாவில் உள்ள ஹியுன்டாய் மோட்டார் நிறுவனத்தில் வேலை செய்த 450 குடியேறிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஓராண்டுக்கு முன் மின்வாகனங்களை உற்பத்திசெய்ய தொடங்கிய ஹியுன்டாய் மோட்டார் நிறுவனத்தில் 1,200 பேர் வேலை செய்கின்றனர்.

