போர்ட் ஓ பிரின்ஸ்: ஹைட்டி தலைநகரான போர்ட் ஓ பிரின்சின் புறநகர்ப் பகுதியில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன்பு கடத்தப்பட்ட அயர்லாந்து மத போதகர், ஆதரவற்ற குழந்தைகள் இல்ல ஊழியர்கள், மூன்று வயது சிறுவன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) தெரிவிக்கப்பட்டது.
போர்ட் ஓ பிரின்சின் புறநகர்ப் பகுதியில் உள்ள கென்ஸ்கோஃப் எனும் இடத்தில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்குள் குண்டர் கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து அவர்களைக் கடத்தியதை அடுத்து, அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று உலகெங்கும் குரல்கள் எழுந்தன.
கென்ஸ்கோஃப் பகுதியில் இவ்வாண்டு பல குண்டர் கும்பல்களுக்கிடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், குண்டர் கும்பலால் கடத்தப்பட்ட சமய போதகர், ஆதரவற்ற குழந்தைகள் இல்ல ஊழியர்கள், மூன்று வயதுச் சிறுவன் விடுவிக்கப்பட்டது குறித்து அந்த இல்லத்தை நடத்தும் என்பிஎச் அறநிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்தது.
அவர்களது விடுதலைக்காகப் பாடுபட்ட அயர்லாந்து வெளியுறவு அமைச்சருக்கு அது நன்றி தெரிவித்துக்கொண்டது.
இவ்வாண்டின் முதல் பாதியில் ஹைட்டியில் 3,300 பேர் கொல்லப்பட்டதாகவும் 336 பேர் கடத்தப்பட்டதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, குண்டர் கும்பல்களால் நிலைகுலைந்திருக்கும் ஹைட்டிக்குக் கூடுதல் பாதுகாப்புப் படையை அனுப்புவது குறித்து ஐநா பரிசீலனை செய்து வருகிறது.