பெங்களூரு: தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. முதன்முறையாக ஓர் அவுன்ஸ் (28 கிராம்) தங்கத்தின் விலை 4,000 அமெரிக்க டாலரைக் ($5,185) கடந்துள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி அடுத்த மாதம் (அக்டோபர் 2025) வட்டி விகிதத்தை மேலும் குறைக்கக்கூடும் என்ற அச்சமும் அமெரிக்க அரசாங்கத்தின் தொடர் முடக்கமும் அதற்குக் காரணங்களாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
நிச்சயமற்ற அரசியல், பொருளியல் சூழல்களிலும் வட்டி விகிதம் குறைந்த நேரத்திலும் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவிழக்கும் வேளையிலும் தங்கத்தின் விலை கூடுவது வழக்கம்.
அக்டோபரில் அமெரிக்க வட்டி விகிதம் கால் விழுக்காட்டுப் புள்ளி குறைக்கப்படக்கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். டிசம்பரில் அது மேலும் இன்னொரு கால் விழுக்காட்டுப் புள்ளி குறைக்கப்படும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.
இந்த ஆண்டில் (2025) மட்டும் தங்கத்தின் விலை 53 விழுக்காடு கூடியிருக்கிறது.
ஓர் அவுன்ஸ் தங்கத்தின் விலை டிசம்பர் மாதத்தில் 4,900 அமெரிக்க டாலரைத் தாண்டிவிடும் என்று கோல்ட்மன் சேக்ஸ் நிறுவனம் முன்னுரைக்கிறது.
சிங்கப்பூரில் புதன்கிழமை (அக்டோபர் 8) பிற்பகல் 3 மணி நிலவரப்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை $161.20.