இந்தோனீசியாவில் உணவுமூலம் பரவும் நோய்களால் கடுமையாகும் பாதிப்பு

இந்தோனீசியாவில் உணவுமூலம் பரவும் நோய்களால் கடுமையாகும் பாதிப்பு

2 mins read
783b6cf4-0fcb-44d0-83aa-17a8edfbba4d
கடந்த ஒரு வாரத்தில் மேலும் ஏறத்தாழ 2,000 பேர் நோய்வாய்ப்பட்டனர். - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் உணவு மூலம் பரவும் நோய்களால் ஏற்படும் பாதிப்பு கடுமையாக உள்ளது.

இதனால் நாடெங்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிபர் பிரபோவோ சுபியாந்தோ தலைமையிலான அரசாங்கம் இலவச சத்துணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

இத்திட்டத்துடன் தொடர்புடைய உணவு மூலம் நோய்ப் பரவல் மோசமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்துணவுத் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. இருப்பினும், அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தொடர வேண்டும் என்று இந்தோனீசிய அரசாங்கம் விடாப்படியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சத்துணவுத் திட்டம் கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏறத்தாழ 3 மில்லியன் மாணவர்களுக்காக இத்திட்டம் முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால், அது மிக விரைவாக விரிவுபடுத்தப்பட்டது. செப்டம்பர் மாத நிலவரப்படி இந்தோனீசியாவெங்கும் 30 மில்லியன் பேருக்கு இலவச சத்துணவு வழங்கப்பட்டது.

இத்திட்டத்தால் 82.9 மில்லியன் மாணவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் பலனடைய வேண்டும் என்பதே இந்தோனீசிய அரசாங்கத்தின் இலக்கு.

இந்நிலையில், சத்துணவுத் திட்டம் மூலம் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்டு 6,000க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சத்துணவுத் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்த மறுத்துவிட்ட இந்தோனீசிய அரசாங்கம், நச்சுணவு சம்பவங்களுடன் தொடர்புடைய சமையலறைகளை மூட உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, மிக உன்னிப்பாகக் கண்காணிப்புடன் சத்துணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது.

கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டும், நச்சுணவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மேலும் ஏறத்தாழ 2,000 பேர் நோய்வாய்ப்பட்டனர்.

செப்டம்பர் மாத இறுதியில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இடமாக மேற்கு ஜாவா இருந்தது. அக்டோபர் மாதத் தொடக்கத்தில் கிழக்கு ஜாவா ஆகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்