ஜெருசலம்: இஸ்ரேல் பீரங்கி வாகனம் சுட்டதில் அந்நாட்டு ராணுவத்தினர் ஐவர் கொல்லப்பட்டனர்; எழுவர் காயமுற்றனர்.
புதன்கிழமை (மே 15) இரவு உள்ளூர் நேரப்படி 7 மணியளவில், காஸாவின் வடபகுதியிலுள்ள ஜபலியா அகதிகள் முகாம்மீது இஸ்ரேல் ராணுவம் தவறுதலாக பீரங்கித் தாக்குதல் நடத்தியதே இந்த உயிருடற்சேதத்திற்குக் காரணம் என்று வியாழக்கிழமை ஓர் அறிக்கை மூலமாக இஸ்ரேல் தற்காப்புப் படை தெரிவித்தது.
இஸ்ரேல் படைப்பிரிவின் துணைத் தளபதி ஒருவர் இருந்த வீட்டை நோக்கி இரண்டு பீரங்கிகள் மூலம் குண்டுவீசித் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவ்வீட்டின் சன்னல் வழியாக ஒரு துப்பாக்கி நீட்டிக்கொண்டிருந்ததைக் கண்டதால் அதனை நோக்கி இஸ்ரேல் படையினர் பீரங்கியைக் கொண்டு குண்டுவீசியதாகக் கூறப்பட்டது.
அங்கிருந்தவர்களைப் பாலஸ்தீனப் போராளிகள் என்று இஸ்ரேல் படையினர் தவறாக நினைத்தது ஏன் என்பது குறித்து இஸ்ரேல் ராணுவம் விசாரித்து வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து இஸ்ரேல் - ஹமாஸ் பூசலில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் படையினர் கொல்லப்பட்டுவிட்டனர்.