ரியோ டி ஜெனிரோ: பிரிக்ஸ் எனப்படும் வளரும் நாடுகளின் நிதியமைச்சர்கள் சனிக்கிழமை (ஜூலை 5) ஒன்றுகூடி அனைத்துலகப் பண நிதியத்துக்குத் தேவையான சீர்திருத்தங்களைப் பரிந்துரை செய்துள்ளனர்.
அதில் வாக்களிக்கும் உரிமையில் மாற்றம், நிதியத்தை வழிவழியாக ஐரோப்பிய நாடுகள் தலைமைத்துவத்தின்கீழ் இருப்பதை முடிவுக்குக் கொண்டு வருவது ஆகியவை அடங்கும்.
பிரிக்ஸ் நாட்டு நிதியமைச்சர்களின் இந்தக் கூட்டறிக்கை அவர்கள் யாவரும் ஒன்றிணைந்து சமர்ப்பித்துள்ள முதல் சீர்திருத்த பரிந்துரைகள் என்று கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அனைத்துலகப் பண நிதியத்தின் ஆய்வுக் கூட்டத்தில் இந்தப் பரிந்துரைகளை முன்வைக்கப்போவதாகத் தெரிவித்துள்ளனர். அந்த ஆய்வில் நிதிப் பங்களிப்பைத் தீர்மானிக்கும் ஒதுக்கீட்டு முறை மற்றும் வாக்களிப்பு உரிமைகள் ஆகியவை பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உறுப்பு நாடுகளின் நிலைக்கு ஏற்றவாறு ஒதுக்கீடு முறை சரிசெய்யப்பட வேண்டும். அதேவேளை, ஏழை நாட்டு உறுப்பினர்களின் ஓதுக்கீடு கட்டிக்காக்கப்பட வேண்டும்,” என்று சந்திப்புக்குப் பின்னர் அந்த நிதியமைச்சர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், வளரும் நாடுளுக்குள்ள ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விளக்கினர்.
பொருளியல், கொள்முதல் திறன் ஆகியவற்றுடன் குறைந்த வருமான நாடுகளின் நாணய மதிப்பைச் சிறந்த முறையில் பிரதிபலிக்கும் வகையில் புதிய ஒதுக்கீட்டு முறை வகுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விளக்கினர்.
பிரிக்ஸ் நாடுகள் அமைப்பு பிரேசில், இந்தியா, ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைத் தாண்டி எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனீசியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகிய நாடுகளை இணைத்து விரிவடைந்துள்ளது. இந்தப் புதிய குழுமத்தின் உச்சநிலைக் கூட்டத்துக்கு முன் மேற்கூறிய நிதியமைச்சர்களின் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிதியமைச்சர்கள் குழு புதிய அரசதந்திர மதிப்பைப் பெற்ற குளோபல் சவுத் எனப்படும் வளரும் நாடுகள் சார்பாக உலக அமைப்புகள் வழிவழியாக மேற்கத்திய வல்லரசுகள் ஆதிக்க செலுத்துவதற்கு எதிராகக் குரல் கொடுக்க எண்ணம் கொண்டுள்ளன. T