பிரேசிலியா: அமெரிக்காவின் வரிவிதிப்பு உள்ளிட்ட வர்த்தக எதிர்ப்பு அம்சங்கள் தொடர்பான யோசனையில் பிரேசில் தீவிரமாக இறங்கி உள்ளது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விதித்த வரிக்குப் பதில் நடவடிக்கை எடுப்பதும் அந்த அம்சங்களில் அடங்கும்.
பிரேசிலில் இருந்து இறக்குமதியாகும் பல்வேறு பொருள்களுக்கு திரு டிரம்ப் 50 விழுக்காட்டு வரி விதித்து உள்ளார். அந்த புதிய வரி ஆகஸ்ட் 6ஆம் தேதி நடப்புக்கு வந்தது. பிரேசிலின் காப்பி உள்ளிட்ட பொருள்களுக்கு அமெரிக்கா 50 விழுக்காட்டு வரியை வசூலிக்கத் தொடங்கிவிட்டது.
அதற்குப் பதிலடி தரும் விதமாக, அமெரிக்காவில் இருந்து பிரேசிலுக்குக் கொண்டு வரப்படும் பொருள்களுக்கு 50 விழுக்காட்டு வரி விதிப்பது பற்றி பிரேசில் பரிசீலிக்கிறது.
அது குறித்து ஆராய அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா அனுமதி அளித்து உள்ளதாக அரசாங்கத் தரப்புகள் தெரிவித்தன.
திரு டிரம்ப்பின் வரிவிதிப்புக்குப் பதிலடி தரும் விதமாக அமெரிக்கப் பொருள்களுக்கான வரியை உயர்த்துவது பற்றி பிரேசிலிய அரசாங்கம் ஆராயத் தொடங்கி உள்ளது.
பொருளியல் எதிரெதிர் சட்டத்தை பிரேசில் கொண்டுள்ளது. திரு டிரம்ப்பின் வரிவிதிப்பு அந்தச் சட்டத்தின்கீழ் வருகிறதா என்பதை பிரேசிலிய வர்த்தக, தொழில் அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
30 நாள்களுக்குள் அது தனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
அந்தச் சட்டத்திற்குள் டிரம்ப் வரிவிதிப்பு வருமானால், பிரேசிலிய பொருளியல் நிபுணர் குழு பதிலுக்குப் பதில் வரி விதிப்பது பற்றிய யோசனையை முன்வைக்கும் என அந்நாட்டின் அரசதந்திரத் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.
இத்தனைக்கும் இடையில் வரி விதிப்பு தொடர்பான அரசதந்திர முறையிலான பேச்சுவார்த்தைக்கு பிரேசில் தயாராக இருப்பதாகவும் அந்தத் தகவல் தெரிவித்தது.
பதிலுக்குப் பதில் வரிவிதிப்பது பற்றி பிரேசில் இன்று (ஆகஸ்ட் 29) அமெரிக்க அரசாங்கத்திடம் முறைப்படி அறிவிக்கும்.