சாங்கி விமான நிலையத்திலிருந்து மூன்று விமானச் சேவைகள் மே ஒன்றாம் தேதி ரத்துசெய்யப்பட்டன.
இந்தோனீசியாவின் சுலவேசி பகுதியில் உள்ள ருவாங் எரிமலைக் குமுறலே அதற்குக் காரணம்.
அந்த விமானங்கள் சிங்கப்பூரிலிருந்து ‘பலிக்பப்பான்’, ‘மனாடோ’, ‘குச்சிங்’ ஆகிய பகுதிகளுக்குப் புறப்படவிருந்ததாக, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் சாங்கி விமான நிலையம் கூறியது.
ஸ்கூட்டின் டிஆர் 222 ரக விமானமும், டிஆர் 216 ரக விமானமும் சாங்கி விமான நிலையத்திலிருந்து முறையே காலை 7.55 மணிக்கும், காலை 9.25 மணிக்கும் புறப்படவிருந்தன. ஏர்ஏசியாவின் ஏகே1776 ரக விமானம் முற்பகல் 11.45 மணிக்குப் புறப்படவிருந்தது.
ஏப்ரல் 16ஆம் தேதியிலிருந்து ஏற்பட்ட ருவாங் எரிமலைத் தொடர் வெடிப்புகளால், ஆயிரக்கணக்கானோர் ஏற்கெனவே வெளியேறிவிட்டனர்.
எரிமலையிலிருந்து வெளிவந்த சாம்பலினால் விமான நிறுவனங்கள் மலேசியாவின் சாபா, சரவாக் மாநிலங்களுக்கான விமானப் பயணங்களை ரத்துசெய்யவேண்டியுள்ளது.
எரிமலையிலிருந்து தூசு போர்னியோ ஆகாயவெளிக்குள் நுழையக்கூடும் என்றும், மே 5ஆம் தேதிவரை விமானச் சேவைகளில் இடையூறு ஏற்படக்கூடும் என்றும் ஏப்ரல் 30ஆம் தேதி மலேசியாவின் வானிலை ஆய்வகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.