சென்னை: தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு இரண்டு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 8ஆம் (இன்று) தேதி முதல் இதற்கான பணிகளை அக்கட்சி நிர்வாகிகள் மேற்கொள்வர் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது அல்லது தவெக தலைமையில் மட்டுமே கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என அக்கட்சித் தலைமை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த சில மாதங்களுக்குள் தவெகவில் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த கட்சித் தலைவர் விஜய் (படம்) உத்தரவிட்டுள்ளார்.
தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக, ‘ஓரணியில் தமிழகம்’ என்ற பெயரில் வீடு, வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது திமுக. மேலும், அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறும் பிரசார பணியையும் ஒருசேரத் துவங்கியுள்ளது.
இதேபோல், எதிர்க்கட்சியான அதிமுக சார்பில், அதன் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி ஜூலை 7ஆம் தேதி முதல் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் துவங்கியுள்ளார்.
இதையடுத்து, நடிகர் விஜய்யின் தவெகவும் தேர்தல் பணியை முடுக்கிவிட்டுள்ளது. கட்சியின் செயற்குழுவில், முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்ட கையோடு, 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிக்கான ஆலோசனைக் கூட்டம் ஜூலை 8ஆம் தேதி நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும், தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப அணியின் இரண்டு நிர்வாகிகளை அழைத்துவர வேண்டும் என்றும் மற்ற நிர்வாகிகள் வர வேண்டாம் என்றும் தவெக பொதுச்செயலர் ஆனந்த் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.