சென்னை: ‘புகையிலை இல்லா இளைஞர் திட்டம் 2.0’ என்னும் திட்டத்தை இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக தமிழ் நாட்டுக்கு மத்திய அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளது.
தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் தேசிய மதிப்பாய்வுக் கூட்டத்தின்போது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சால் இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த விருதினை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இது தொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தேசிய புகையிலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படும் மாநிலமாக அங்கக்கப்பட்டு, தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் தேசிய மதிப்பாய்வுக் கூட்டத்தின்போது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சால் வழங்கப்பட்ட விருதினை முதல்வர் ஸ்டாலினிடம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் காண்பித்து வாழ்த்து பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.
தேசிய புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டம், தமிழ்நாட்டில் 2007ஆம் ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் தடுப்புச் சட்டம் - 2003ல் அமல்படுத்தப்பட்டு பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை செய்தல், சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்களை 18 வயதிற்கு குறைந்தவர்களுக்கு மற்றும் கல்வி நிறுவனங்களைச் சுற்றி 100 முற்றம் சுற்றளவிற்கு விற்பனை செய்வதற்குத் தடை விதித்தல், புகையிலைப் பொருட்களை விளம்பரம் செய்வதற்குத் தடை, சுகாதார நல எச்சரிக்கையோடு கூடிய புகைப்படம் புகையிலைப் பொருட்கள்மீது அச்சிடப்பட்டிருக்க வேண்டும் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேசியப் புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ், கடந்த ஆண்டு 24.09.2024 முதல் 23.11.2024 வரை 60 நாட்கள் புகையிலை மற்றும் புகைப்பதன் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘புகையிலை இல்லா இளைஞர்கள்’ விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.