சென்னை: தமிழகத்தில் 1995ஆம் ஆண்டு முதல் இந்து அமைப்பு நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் பயங்கரவாதிகளால் குறிவைத்துக் கொல்லப்பட்டனர்; அதற்கெல்லாம் மூளையாகச் செயல்பட்ட நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக், நெல்லையைச் சேர்ந்த முகம்மது அலி ஆகியோர் தலைமறைவாகினர்.
மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் ரத யாத்திரையின்போது பைப் குண்டு வெடிக்கச் செய்தது, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தின் மீது குண்டு வீசியது உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் இவர்கள் இருவருக்கும் நேரடித் தொடர்புள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில், இவர்கள் மாறி மாறி மறைந்து வாழ்வது தெரியவந்ததையடுத்து, இருவரையும் பிடிக்க தமிழக பயங்கரவாதத் தடுப்புக் காவல்துறை தனிப்படை அமைத்தது.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள ராயச்சோட்டி என்ற இடத்தில், அபுபக்கர் சித்திக், முகம்மது அலி ஆகியோரைத் தமிழகக் காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு ஜூலை ஒன்றாம் தேதி கைதுசெய்தனர்.
தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்ட அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், ராயச்சோட்டியில் அவர்கள் இருந்த வீட்டில் ஆந்திரப் பிரதேசக் காவல்துறையினர் சனிக்கிழமை (ஜூலை 5) சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்கள், பென் டிரைவ் கருவிகள், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நாளிதழ்கள், இந்தியாவின் முக்கிய இடங்களின் வரைபடங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து கர்னூல் டிஐஜி கோயா ப்ரவீன், “கைதுசெய்யப்பட்ட அபுபக்கர் சித்திக்கை முதலில் சாதாரணமானவர் என்றுதான் நினைத்தோம். தொடர் விசாரணையில் அவர் மிகவும் ஆபத்தான பயங்கரவாதி என்பது தெரியவந்துள்ளது.
“பங்ளாதேஷ் வெடிகுண்டு வழக்கில், நம் நாட்டிலிருந்து தப்பியோடிய மும்பையைச் சேர்ந்த பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முக்கியக் காரணமாக விளங்கிய இஸ்லாமிய சமய போதகர் ஷாகிர் நாயக்குடன் அபுபக்கர் சித்திக் நெருக்கமாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
“தலைமறைவாக இருந்த காலத்தில் பெங்களூரின் மல்லேஸ்வரம் பகுதி பாஜக அலுவலக குண்டுவெடிப்பிலும் இவருக்குத் தொடர்புள்ளது.
“வெடிகுண்டு, நேரத்துக்கு வெடிக்கும் தானியக்க வெடிகுண்டு (time-bomb) தயாரிப்பதிலும் சித்திக் தேர்ச்சி பெற்றுள்ளார்,” என்று விவரித்தார்.