நெல்லை: சேலம் மாவட்டம் அய்யன் பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 47). இவர் காற்றாலைகளுக்கு மின் உபகரணங்கள் வாங்கி மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு ஃபேஸ்புக் மூலமாக பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த பானுமதி (40) என்ற பெண்ணுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, பானுமதி ஏப்ரல் 29ஆம் தேதி ஆசை வார்த்தை கூறி நித்யானந்தத்தை நெல்லைக்கு வரவழைத்துள்ளார். பின்னர் பானுமதி வீட்டுக்குச் சென்ற அவரை அங்கிருந்த மேலும் 4 பேர் கும்பல் சேர்ந்து கடத்தி சென்று நகை, ரூ.10 லட்சம் பணம் உள்ளிட்டவற்றைப் பறித்தது.
இதுகுறித்து நித்யானந்தம் நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் மூர்த்தியிடம் அளித்த புகாரின்பேரில் தனிப்படை உதவி ஆய்வாளர் அருணாச்சலம் தலைமையிலான காவல்துறையினர், பானுமதி, அவரது கூட்டாளிகளான ஆழ்வார்திருநகரியை சேர்ந்த பார்த்தசாரதி (46), வெள்ளத்துரை (42), ரஞ்சித் (42), ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சுடலை (40) ஆகிய 5 பேரைக் கைது செய்தனர்.
அந்த கும்பலிடம் நடத்திய விசாரணையில் பானுமதி மற்றும் அவரது கூட்டாளிகள் இதேபோல் பல ஆண்டுகளாக பல தொழில் அதிபர்களை தங்கள் வலையில் சிக்கவைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்தது தெரியவந்தது.
இதுகுறித்து மாநகர காவல்துறை ஆணையர் கூறுகையில், “பல வருடங்களாக இந்த கும்பல் தொழிலதிபர்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து பணத்தை அபகரித்துள்ளனர்.
“இந்த கும்பலிடம் தங்களது பணத்தை இழந்தவர்கள் வெளியே சொல்லாமல் இருக்கிறார்கள். இன்று (மே 2) அல்லது வெள்ளிக்கிழமை அந்த கும்பலை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். அதன்பின்னரே இதுவரை எத்தனை தொழிலதிபர்களை ஏமாற்றி எவ்வளவு பணத்தை இவர்கள் பறித்துள்ளனர் என்ற விவரம் தெரியவரும்.
“அதேநேரத்தில் பணத்தை இழந்த தொழிலதிபர்கள் எங்களிடம் வந்து புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்கள் பெயர் ரகசியம் காக்கப்பட்டு அவர்களது பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.