கோவை: அதிமுகவில் பதவி பறிக்கப்பட்ட நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லிக்குச் சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
திரு செங்கோட்டையன் திங்கட்கிழமை (செப்டம்பர் 8) காலை கோயம்புத்தூரில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் ஹரித்துவார் கோயிலுக்குச் செல்கிறேன். டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களை யாரையும் சந்திக்கப் போவதில்லை,” என்று கூறினார்.
கோயிலுக்குச் சென்றுவிட்டு வந்தால் மனம் கொஞ்சம் அமைதி அடையும். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்துக்கு நான் பதில் கூற முடியாது. கட்சியின் நன்மைக்காக என் கருத்தைச் சொன்னேன்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கட்சி சார்ந்து பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளார். அதற்கெல்லாம் என்னிடம் பதில் இல்லை. காலம்தான் பதில் சொல்லும்.
“மேலும், ஹரித்துவார் செல்லவில்லை. ராமரைச் சந்திக்கவே செல்கிறேன். வேறு யாரையும் சந்திக்கப்போவதில்லை. செவ்வாய்க்கிழமை பிற்பகல் திரும்பிவிடுவேன்,” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை அவரது இல்லத்தில் செங்கோட்டையன் திங்கட்கிழமை இரவு சந்தித்துப் பேசியுள்ளார்.
அப்போது, அதிமுகவில் இருந்து தான் நீக்கப்பட்டது குறித்தும் இப்போதைய சூழல் குறித்தும் அவரிடம் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் சந்திப்பு குறித்து பாஜக தரப்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
ஆனால், அதிமுக தரப்பினரோ, அமித்ஷாவை செங்கோட்டையன் திங்கட்கிழமை சந்திக்கவே இல்லை என்று அடித்துச் சொல்கின்றனர்.
துணை அதிபர் தேர்தல் தொடர்பான ஆலோசனையில்தான் திங்கட்கிழமை முழுவதுமே மத்திய அமைச்சர் அமித்ஷா மும்முரமாக ஈடுபட்டு வந்தார். செங்கோட்டையனுக்கு நேரம் ஒதுக்கப்படவே இல்லை.
அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்ததாகக் கூறப்படும் நேரத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றொரு மத்திய அமைச்சரான பிரகலாத் ஜோஷியுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார் என்று கூறுகிறது அதிமுக வட்டாரம்.

