சென்னை: தமிழகக் கடலோரப் பகுதிகளில் பயங்கரவாத ஊடுருவலை முறியடிக்கும் விதமாக ‘சாகர் கவச்’ என்ற பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
ஏறக்குறைய, 36 மணி நேரத்துக்கு நீண்ட இந்த ஒத்திகை, வியாழக்கிழமை (ஜூன் 26) மாலை முடிவடைந்தது.
நாடு முழுவதும் குறிப்பிட்ட கால இடைவெளியில், பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தும் விதமாக, மத்திய, மாநில அரசுகள் பயங்கரவாத ஊடுருவல் முறியடிப்பு ஒத்திகைகளை நடத்தி வருகின்றன.
இந்த ஒத்திகையில், மாநிலக் கடலோரப் பாதுகாப்பு குழுமம், ஆயுதப்படை, கடலோரக் காவல் படை, குற்றப்பிரிவு காவல்துறை எனப் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.
ஒத்திகையின்போது, அரசு அலுவலகங்கள், விமான - ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், கோவில்கள், மக்கள் அதிகம் கூடும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.
மேலும், பாதுகாப்புப் படையினரில் சிலர் தீவிரவாதிகள் போன்று வேடமிட்டு, கடல் வழியாக ஊடுருவ முயற்சி செய்வர். அவர்களை அடையாளம் கண்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்வது வழக்கம்.
அந்த வகையில், கடந்த 36 மணி நேரமாக மேற்கொள்ளப்பட்ட ஒத்திகையில், 8,000 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாறுவேடத்தில் வந்த வீரர்களுக்கு அவர்கள் தாக்க வேண்டிய இடங்கள் குறித்த குறிப்புகள் அளிக்கப்பட்டன. அவர்களின் முயற்சியை முறியடிக்க வீரர்களுக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.