சென்னை: தமிழக அரசு செயல்படுத்தி வரும் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம், இதுவரை 272 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 64,000 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக அரசு தெரிவித்தது.
சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை, மக்கள் நலம் பெற துணைபுரியும் துறையாக வளர்ந்து அரசுக்கு பெருமை சேர்த்து வருவதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களைத் தொடர்ந்து கண்காணித்து, அவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறையின் முக்கியப் பணி.
“இத்துறை வாயிலாக, நான்கு ஆண்டுகளில், 30க்கும் அதிகமான துறைகளில், 2.59 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தொடர்பாக, குறுகியகால திறன் பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது.
“தமிழகத்தில் உயர் கல்வியை மாற்றி அமைக்கக் கூடிய வெற்றி திட்டமாக, ‘நான் முதல்வன்’ திட்டம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, இத்திட்டத்தின் கீழ், 41.3 லட்சம் மாணவர்களும் ஒரு லட்சம் விரிவுரையாளர்களும் பயிற்சி பெற்றுள்ளனர்,” என அறிக்கையில் தெரிவித்துள்ளது.
272 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 2.60 லட்சம் மாணவர்களில் 63,949 மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்றும் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட கல்லுாரி விடுதி மாணவர்கள், 2.59 லட்சம் பேருக்கு ஆங்கிலம் பேச பயிற்சி தரப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாம்பரம், சென்னை, கடலுார், சிவகங்கை, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில், சமூகநல இல்லங்களில் தங்கி உள்ளவர்களுக்கு, தகவல் தொழில்நுட்பத் திறன்களுடன், ஆங்கிலத் தகவல் தொடர்பு, அலுவலக வரவேற்பாளர் பயிற்சிகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில், கடந்த ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி, 31.40 லட்சம் பேர் வேலை கேட்டு பதிவு செய்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
வேலை வாய்ப்புத் துறை இணையத்தளத்தில், ஜூன் மாதம் 30ஆம் தேதி நிலவரப்படி, 14.09 லட்சம் ஆண்கள்; 17.31 லட்சம் பெண்கள்; 257 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 31.40 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.