சென்னை: அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனைத் தாம் நேரில் சந்தித்ததாக வெளியான தகவலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் இணைக்க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரையும் செங்கோட்டையன் சந்தித்தார்.
இந்நிலையில், திடீர் பயணமாக கோவையிலிருந்து புதன்கிழமை (செப்டம்பர் 24) சென்னைக்கு வந்த செங்கோட்டையன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்ததாகத் தகவல்கள் பரவின. அதன் தொடர்பில் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) செய்தியாளர்களுடன் பேசிய செங்கோட்டையன், ”சென்னையில் எனது மனைவி சிகிச்சை பெற்று வருகிறார். அதற்காகத்தான் நேற்று சென்னை சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பியுள்ளேன். அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை.
“கட்சியின் ஒருங்கிணைப்புப் பணிக்காக பல்வேறு நண்பர்கள் என்னுடன் பேசியுள்ளனர். அனைவரின் மனத்திலும் ஒருமித்த கருத்துகள் இருக்கின்றன. யாரெல்லாாம் என்னிடம் பேசினர் என்பதை வெளியிட முடியாது. இன்றுவரை நான் கூறியதற்கு யாரும் மறுப்பு தெரிவிக்காமல் இருப்பது, அனைவருடைய மனத்திலும் ஒன்றிணைந்து வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம் இருப்பதைப் பிரதிபலிக்கிறது,” என்று விளக்கமளித்ததாக தினமணி ஊடகம் தெரிவித்துள்ளது.

