சென்னை: தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு வெள்ளிக்கிழமை நினைவுகூரப்பட்டது. தமிழில் அருச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர் அவர்; சமூகநீதித் தளத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி எனத் திராவிட இயக்கத்துக்குத் துணையாக நின்ற மாண்பாளர் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளப் பதிவில் பாராட்டியுள்ளார்.
இந்தி எதிர்ப்புப் போரில் பங்கெடுத்த தமிழுணர்வாளர். கலைஞரின் விருப்பத்தின் வழியே தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகி, மேலவையில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் எனப் பேசிய பெருந்தகையாளர் எனக் கூறியுள்ளார்.
தமிழ் சமூகத்தை உள்ளடக்கிய இறையியல் அடையாளமாக விளங்கும் திருக்கைலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி 45வது மகா சந்நிதானம் திருப்பெருந்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் எனும் குன்றக்குடி அடிகளாரின் புகழ் வாழ்க. அவரது வழியில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

