திருநெல்வேலி: இந்தியா அதிகமான செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பியுள்ள காரணத்தால்தான் வானிலை குறித்த துல்லியமான தகவல்களைப் பெற முடிகிறது என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது இதனைத் தெரிவித்தார்.
வானிலை குறித்த தகவல்களை முன்கூட்டியே துல்லியமாக அறிய முடிகிறது என்றால் அதற்கு விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்கள்தான் காரணம்.
இந்த செயற்கைக் கோள்கள் மூலம், மீனவர்கள் நாட்டின் எல்லையைக் கடந்து சென்று அண்டை நாட்டவரிடம் சிக்காமலிருக்கவும், மீன்கள் அதிகமாக உள்ள பகுதிகளை அறியவும் முடியும். இதுபோன்ற தகவல்களைப் பெறுவதற்கு ஏராளமான செயலிகளை உருவாக்கி அளித்துள்ளோம். அதன் மூலம் தமிழிலேயே தகவல்களைப் பெற முடியும் என்று கூறினார்.
ககன்யான் திட்டத்துக்காக 80 ஆயிரம் சோதனைகள் நடைபெற்றுள்ளன. இத்திட்டத்தில் முதலில் 3 ஆளில்லா ஏவுகணைகளை விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்த பின்பே, ஆட்களை விண்ணுக்கு அனுப்புவோம்.
உலக அளவில் விண்வெளிக்கு ராக்கெட்டுகளை வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதில் இந்தியா 2 விழுக்காட்டுப் பங்களிப்பை கொண்டுள்ளது.
இதை 10 விழுக்காடாக உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது, 10 ஆயிரம் கிலோ எடை கொண்ட செயற்கை கோள்களை எடுத்து செல்லும் ஏவுகணைகளை வெற்றிகரமாக அனுப்பி உள்ளோம். 40 ஆயிரம் கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை அனுப்புவதற்கு தேவையான ராக்கெட்டுகளைத் தயாரிக்க அனுமதி கிடைத்துள்ளது.
அந்தப் பணியும் நடைபெறுகிறது.ககன்யான் திட்டத்துக்கு, 80 ஆயிரம் கிலோ செயற்கை கோளை சுமந்து செல்லும் ராக்கெட்டைத் தயாரிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன என்றார் விஞ்ஞானி நாராயணன்.