காஞ்சிபுரம்: எங்கள் கட்சியை ஆதரிக்கும் இளைஞர்கள் ‘தற்குறிகள்’ அல்ல; தமிழ்நாட்டு அரசியல் மாற்றத்திற்கான ‘ஆச்சரியக்குறிகள்’. இவர்கள் ஆளுங்கட்சியின் அரசியலைக் ‘கேள்விக்குறி’ ஆக்கப் போகிறார்கள் என்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் ஆவேசமாகப் பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விஜய் பேசியபோது, திமுகவின் விமர்சனங்களுக்கு எம்ஜிஆரின் புகழ்பெற்ற சினிமா வசனத்தை மேற்கோள் காட்டி விஜய் பதிலடி கொடுத்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்ஜிஆர் பாணியில் எச்சரிக்கை
‘மர்மயோகி’ படத்தில் எம்ஜிஆர், ‘குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்கமாட்டேன்’ என்று ஒரு வசனம் பேசியிருப்பார். அதை நான் இப்போது ஏன் பேசுகிறேன் என்பது சம்மந்தப்பட்டவர்களுக்குப் புரியும்.
ஏன் இவரைத் தொட்டோம், இவருடன் இருக்கும் மக்களைச் சீண்டினோம் என அவர்கள் வருந்தும் நிலை வரும்.
‘கூத்தாடி’ விமர்சனத்திற்குப் பதில்
“54 ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோதும், அவரை ‘கூத்தாடி’, ‘நடிகர் கட்சி’ என்றெல்லாம் விமர்சித்தனர். ஆனால், விமர்சித்தவர்களே பின்னர் அவருடன் இணைந்தனர். ஒட்டுமொத்த மக்களும் எம்ஜிஆர் பக்கமே நின்றனர். அதே பழைய ‘கதறல்’ இப்போதும் கேட்கிறது. இது வரலாறு,” என்று விஜய் பேசினார்.

