நாங்குநேரி: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே தொழிலாளி ஒருவரின் வீட்டுக்கான மின்கட்டணம் ரூ.1.61 கோடி என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது குடும்பம் அதிர்ச்சியில் மூழ்கியது.
நாங்குநேரி அருகே மூலைக்கரைப்பட்டி மின் வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட மருதகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்.
நால்வரைக் கொண்ட இவரது குடும்பத்துக்கான மின்கட்டணத்தை கடந்த சில நாள்களுக்குமுன் ஊழியர் ஒருவர் கணக்கீடு செய்துவிட்டுச் சென்றிருந்தார்.
அதன் பிறகு, மின்கட்டண விவரம் மாரியப்பனின் கைப்பேசிக்கு வந்துள்ளது. மின்கட்டணம் ரூ. 1 கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 281 என்று குறிப்பிடப்பட்டு இருந்ததால், மாரியப்பனின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவர் இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டார். அதிகாரிகள் ஆய்வு நடத்தியதைத் தொடர்ந்து, தொழில்நுட்பக் கோளாறு மற்றும் மனிதத் தவறு காரணமாக அதிகப்படியான மின்கட்டணம் வந்துள்ளது தெரியவந்தது.
தவறான மின் அளவை திருத்தம் செய்து, சரியான மின் அளவு பதிவேற்றம் செய்யப்பட்டு மாரியப்பனின் வீட்டு மின் இணைப்புக்கான கட்டணம் ரூ.494 என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

