டார்ட்மண்ட்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் (யுசிஎல்) காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் ஜெர்மனியின் பொருசியா டோர்ட்மண்ட், பிரான்சின் பிஎஸ்ஜியை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றுள்ளது.
அரையிறுதிச் சுற்றில் குழுக்கள் இருமுறை மோதும். இரு ஆட்டங்களின் மொத்த கோல் எண்ணிக்கையைக் கொண்டு வெற்றிபெறும் குழு தீர்மானிக்கப்படும்.
இச்சுற்றின் முதல் ஆட்டம் டோர்ட்மண்ட்டின் சொந்த மண்ணில் நடைபெற்றது. அதில் அக்குழுவின் நிக்லாஸ் ஃபுவெல்குருக் ஒரே கோலைப் போட்டார்.
எனினும், கோல் வித்தியாசம் ஒரே கோலாக இருப்பதால் பிஎஸ்ஜிக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகம் குறையவில்லை என்றும் கருதப்படுகிறது. இரண்டாம் ஆட்டம் பிஎஸ்ஜியின் சொந்த மண்ணில் நடக்கும்.
பிஎஸ்ஜி, இந்தப் பருவத்தின் லீக் 1 என்றழைக்கப்படும் பிரெஞ்சு லீக் விருதை வெல்வது சில நாள்களுக்கு முன்பு உறுதியானது. வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வெல்லும் இலக்கை கொண்டுள்ளது பிஎஸ்ஜி.
டோர்ட்மண்ட், கடைசியாக 1997ஆம் அண்டு சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றது. அக்குழு கடைசியாக 2013ல் இப்போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.