கௌகாத்தி: தென்னாப்பிரிக்கா, மகளிர் உலகக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.
கௌகாத்தியில் புதன்கிழமை (அக்டோபர் 29) நடைபெற்ற அரையிறுதியில் அது இங்கிலாந்தை 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிகண்டது.
முதலில் பந்தடித்த தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 319 ஓட்டங்களைக் குவித்தது. அணித்தலைவர் லாரா வோல்ஃபார்ட், மிகச் சிறப்பாக ஆடி 143 பந்துகளில் 169 ஓட்டங்களை எடுத்தார். அவர் 20 பண்டரிகளையும் 4 சிக்ஸர்களையும் அடித்தார். தொடக்கத்தில் ஒரு புறம் விக்கெட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக விழுந்தாலும் தடுமாறாமல், நிலைத்து நின்று ஆடினார் வோல்ஃபார்ட். உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் ஆக அதிக ஓட்டங்களை எடுத்த தென்னாப்பிரிக்க வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். ஆட்ட நாயகி விருதையும் வென்றார் வோல்ஃபார்ட்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து, 42.3 ஓவர்களில் 194 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென்னாப்பிரிக்காவின் மாரிஸான் கேப், அற்புதமாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


