பீகார்: இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஆசியக் கிண்ணத்தின் இறுதி ஆட்டத்தில் தென்கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மகுடம் சூடியது.
இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நடந்தது.
ஆட்டம் தொடங்கிய 31வது வினாடியில் இந்தியாவின் சுக்ஜீத் சிங் கோல் அடித்து அசத்தினார். அதன்பின்னர் தில்பிரீத் சிங் 28 மற்றும் 45வது நிமிடங்களில் கோல்கள் அடித்தார்.
அமித் ரோகிதாசும் தன் பங்கிற்கு 50வது நிமிடத்தில் கோல் அடித்து இந்தியாவை 4-0 என்று முன்னிலை பெறச் செய்தார்.
தென்கொரியா ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. அதன் பின்னர் இந்தியாவின் தற்காப்பை அதனால் உடைக்கமுடியாததால் தென்கொரியா தோல்வியைத் தழுவியது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அடுத்த ஆண்டு நெதர்லாந்து, பெல்ஜியத்தில் நடக்கவுள்ள ஹாக்கி உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.
இந்திய அணி நான்காவது முறையாக ஆசியக் கிண்ணத்தை வென்றுள்ளது. கடைசியாக இதற்குமுன் 2017ஆம் ஆண்டு பங்ளாதேஷில் நடந்த ஆசியக் கிண்ணத்தில் இந்தியா வாகை சூடியது.

