ஈசூனில் அண்டைவீட்டு மாதைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 66 வயது கோ ஆ ஹுவியை மருத்துவப் பரிசோதனைக்காக விசாரணைக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரரான கோ, காவல் வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து காணொளிமூலம் வியாழக்கிழமை (அக்டோபர் 9) நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
சிவப்பு போலோ சட்டை அணிந்திருந்த கோ அ ஹுவீ, நீதிமன்ற விசாரணைகள் ஹொக்கியன் மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்தபோது பல இடங்களில் தலையை அசைத்தார். அதிகம் பேசவில்லை.
உயர் நீதிமன்றக் குற்றச்சாட்டை அவர் எதிர்நோக்குவதாகக் குறிப்பிட்ட வழக்குரைஞர், மருத்துவப் பரிசோதனைக்காகச் சாங்கி சிறைச்சாலை மருத்துவ நிலையத்தில் அவரைக் காவலில் வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
வழக்கு மீண்டும் அக்டோபர் 30ஆம் தேதி நீதிமன்றத்துக்கு வரும்.
திருவாட்டி நுவென் புவோங் டிராவை, 30, மார்பில் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக கோ மீது கடந்த மாதம் குற்றம் சாட்டப்பட்டது.
ஈசூன் சென்ட்ரல் புளோக் 323ன் ஆறாவது மாடியில் உள்ள பொது நடைபாதையில் செப்டம்பர் 24ஆம் தேதி காலை 7.25 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.