ஒருவருக்கொருவரது மரபு, கலாசாரங்கள் மீதான புரிந்துணர்வை ஆழப்படுத்துவதால் ஒரு சமூகமாக நாம் அதிகம் சாதிக்க இயலும்.
பன்முகத்தன்மையை பலவீனமாகக் கருதாமல் பலமாகக் காணும்போது இது சாத்தியம் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.
இந்து அறக்கட்டளை வாரியம், இந்து ஆலோசனை மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சமயங்களுக்கு இடையிலான எஸ்ஜி60 தீபாவளித் தேநீர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திரு கான் உரையாற்றினார்.
அறுபது ஆண்டுகளாகக் கடந்துவந்த பாதையைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல் சமூக ஒற்றுமையை எவ்வாறு தொடர்ந்து வளர்க்க முடியும் என்பதையும் யோசிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சிங்கப்பூரின் கிட்டத்தட்ட 10 சமயங்களைச் சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள், அடித்தளப் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினர் திங்கட்கிழமை (நவம்பர் 3) சிங்கப்பூர் சீனக் கலாசார மையத்தில் கொண்டாட்டங்களில் இணைந்தார்கள்.
துணைப் பிரதமருடன் கலாசார, சமூக, இளையர்துறை; மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
எஸ்ஜி60 கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக ‘கலெக்டிவ் கேன்வாஸ்’ எனப்படும் மாபெரும் வண்ணக் கலைப்படைப்பை திரு கான் அறிமுகப்படுத்தினார்.
வளையல்கள், தானியங்கள், பலூன்கள் போன்ற மறுபயனீடு செய்யப்பட்ட 60 அன்றாடப் பொருள்களால் ஏறத்தாழ 25 சமயக் குழு உறுப்பினர்கள் இந்தக் கலைப்படைப்பை உருவாக்கினார்கள்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் புகழ்பெற்ற கலைஞரும் கின்னஸ் உலகச் சாதனையாளருமான விஜயா மோகன் இந்தக் கலைப்படைப்பை வழிநடத்தினார்.
இந்தக் கலைப்படைப்பு விரைவில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்தது.
சமயங்களுக்கு இடையிலான உரையாடல் என்பது சமய, சமூகத் தலைவர்களின் பொறுப்பு மட்டுமன்று என்றார் இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் ராஜன் கிருஷ்ணன்.
“ஒரு சமூகம் எதிர்கொள்ளும் சவால் நம் அனைவருக்கும் ஒரு சவாலாகும்,” என்றார்.
‘எஸ்ஜி60’ சமயங்களுக்கு இடையிலான தீபாவளித் தேநீர் நிகழ்ச்சியில் ஆடல், இளையர் உரையாடல் அங்கங்களுடன் சுவையான உணவு, பானங்களும் மக்களுக்குப் பரிமாறப்பட்டன.

