மக்கள் செயல் கட்சியின் மாநாடு மற்றும் விருது விழாவில் அக்கட்சியின் முக்கிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு லிம் சுவீ சேவுக்கு ‘மெச்சத்தக்க சேவை பதக்கம்‘ வழங்கப்பட்டது.
இந்த மிக உயரிய விருதை, ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) காலை நடைபெற்ற மசெக மாநாட்டு அரங்கில் அக்கட்சியின் தலைவர் டெஸ்மண்ட் லீயிடமிருந்து பெற்றார் திரு லிம்.
கட்சி, தேசம் என இரண்டிற்கும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் பங்காற்றியதற்காக விழா அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட 426 கட்சி ஆர்வலர்களில் திரு லிம்மும் ஒருவர்.
1996ஆம் ஆண்டு மசெகவில் இணைந்த திரு லிம், 1997ஆம் ஆண்டு தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக வாகைசூடியவர்.
தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் முன்னாள் தலைமைச் செயலாளர், சுற்றுப்புறம், பிரதமர் அலுவலகம், மனிதவளம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர் திரு லிம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திரு லிம், இந்த விருதால் நெகிழ்வதாகவும், பல்வேறு தலைவர்கள் ஆர்வலர்களுடன் இணைந்து பல ஆண்டுகளாக நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்யக் கிடைத்த வாய்ப்புக்குத் தாம் நன்றிக் கடன்பட்டிருப்பதாகவும் சொன்னார்.

