மது அருந்திவிட்டு ஓட்டுநர் உரிமம் இல்லாமல் தமது காரை ஓட்ட அனுமதிக்கப்பட்ட தம் தோழியை சிக்கலிலிருந்து காப்பாற்ற, காவல்துறை போட்ட சாலைத் தடுப்புக்கு அருகில் உள்ள வீதிக்குச் சென்று இரு நண்பர்களும் காரில் இருக்கை மாறி அமர்ந்துகொண்டனர்.
இந்த வழக்கில், கார் ஓட்டிய 32 வயது எஸ்டெல்லா சன் வெய்லினுக்கு ஆறு வாரச் சிறைத் தண்டனையும், 29 வயது தோழி ஃபோங் யோக் முன்னுக்கு ஐந்து வாரச் சிறைத் தண்டனையும் புதன்கிழமை (ஆகஸ்ட் 6) விதிக்கப்பட்டது. இரு பெண்களுக்கும் ஈராண்டுகளுக்கு அனைத்து வகை வாகனங்களை ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2023 டிசம்பர் 23ஆம் தேதி அதிகாலை வேளையில், சன் காரை ஓட்டினார். அவருக்குப் பக்கத்தில் ஃபோங் முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். காவல்துறை போட்ட சாலைத் தடுப்பைக் கண்ட சன், காரைப் பின்னோக்கி நகர்த்தி, அருகிலிருந்த ஒரு சாலைக்குச் சென்று ஃபோங்குடன் இருக்கை மாறி அமர்ந்துகொண்டார்.
இதனைக் கண்ட காவல்துறையினர், சிங்கப்பூரர்களான அவர்கள் இருவரையும் கைதுசெய்தனர்.
நீதித்துறை செயல்பாட்டுக்கு இடையூறு விளைவிக்க முற்பட்டதாக ஜூலையில் இருவரும் தங்கள் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
மேலும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் கார் ஓட்டியதை சன்னும் இதற்கு உடந்தையாக இருந்ததை ஃபோங்கும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

