சீமெய், தானா மேரா பெருவிரைவு ரயில் (எம்ஆர்டி) நிலையங்கள் சில நாள்கள் மூடப்பட இருப்பதையொட்டி அந்தக் காலகட்டத்தில் கிழக்கு-மேற்கு பெருவிரைவுப் பாதையில் அன்றாடம் பயணம் செய்வோருக்குப் பயண நேரம் அதிகரிக்கலாம் என்றும் பாதிக்கப்பட்ட இடங்களில் அதிக கூட்டம் கூடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சங்களைக் கருத்தில்கொள்ளுமாறு கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் பயணம் செய்வோர் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
சீமெய், தானா மேரா நிலையம் அடுத்த சனிக்கிழமை (நவம்பர் 29) முதல் வரும் டிசம்பர் மாதம் எட்டாம் தேதி வரை மூடப்படும்.
சனிக்கிழமை (நவம்பர் 22) அதை நினைவூட்டிய நிலப் போக்குவரத்து ஆணையம், அவ்விரு நிலையங்களும் மூடப்படுவதால் பிடோக், தெம்பனிஸ் நிலையங்களுக்கு இடையேயும் தானா மேரா, எக்ஸ்போ நிலையங்களுக்கு இடையேயும் ரயில் சேவை இருக்காது என்று குறிப்பிட்டது.
பாதிக்கப்பட்ட ரயில் நிலையங்களிலும் பேருந்து நிறுத்தங்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு, பயண நேரம் 30 நிமிடங்கள் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கிழக்கு-மேற்குப் பாதையை ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைக்கப்பட்ட பணிமனையுடனும் தானா மேரா நிலையத்தில் அமையும் புதிய மேடையுடனும் இணைப்பதற்கான பணிகளுக்காக இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கடந்த மாதம் தெரிவித்தது.

