ஜோகூர் பாரு: ஜோகூரில் அண்மையில் சட்டவிரோத வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பாக இடம்பெற்ற அதிரடி நடவடிக்கைகளைப் பயன்படுத்தி மோசடி நடக்கின்றன.
பிடிக்கப்பட்ட ஊழியர்களை குறிப்பிட்ட கட்டணத்தில் விடுவிக்க உதவுவதாக முதலாளிகளைத் தொடர்புகொள்கின்றனர்.
ஏறக்குறைய 130 வெளிநாட்டு ஊழியர்களை விடுவிக்க சிங்கப்பூர் தொழிலதிபர் ஒருவர் கிட்டத்தட்ட 700,000 மலேசிய ரிங்கிட் (S$213,000) இழந்தபோது மோசடிச் செயல் கண்டுபிடிக்கப்பட்டது.
டத்தோஸ்ரீ என்று கூறிக்கொண்ட ஒருவர், அண்மைய குடிநுழைவு நடவடிக்கையின்போது தடுத்து வைக்கப்பட்ட ஊழியர்களை விடுவிக்க முடியும் என்று அந்தத் தொழிலதிபருக்கு உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
பாதுகாப்பாக அவர்களை விடுவிக்க குடிநுழைவு அதிகாரிகளுக்குக் கொடுப்பதற்கும் தனது சேவைக்கும் கிட்டத்தட்ட 700,000 ரிங்கிட் கேட்டுள்ளார். தொடக்கத்தில் சந்தேகப்பட்ட அந்த தொழிலதிபரை, தாம் குடிநுழைவுத் துறையில் தொடர்புள்ள செல்வாக்கு மிக்க நபர் என்று மோசடிப் பேர்வழி நம்பவைத்துள்ளார்.
ஆனால், பணப் பரிமாற்றத்திற்குப் பிறகு டத்தோஸ்ரீயைத் தொடர்புகொள்ள முடியாதபோது தவறு இருப்பதாக சிங்கப்பூரர் சந்தேகித்தார். பின்னர் அவர் காவல்துறையில் புகார் அளித்தார்.
வழக்கை உறுதிப்படுத்திய மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
வேறொரு வழக்கில், 45 வயதான ஒரு மருத்துவர் அதிக வருமானம் தருவதாக உறுதியளித்த இணைய முதலீட்டுத் திட்டத்தில் ஏமாற்றப்பட்டு கிட்டத்தட்ட 2.6 மில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தெரியாதவர்களைக் கையாளும்போது நிதிப் பரிவர்த்தனைகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்குமாறு ஜோகூர் மாநிலக் காவல்துறை தலைவர் அப்துல் ரஹ்மான் அர்சாத் பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.