வெளிநாட்டு ஊழியர்களை அவமதித்துப் பேசி ஆடவர் ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவேற்றிய காணொளியைச் சிங்கப்பூரர்கள் பலர் சாடியுள்ளனர்.
அவர்களில் ஒருவரான 39 வயது திருவாட்டி கார்மென் ஒர்டெகா, வெளிநாட்டு ஊழியர்களுக்காக வருத்தப்படுவதாகக் கூறினார்.
‘கன்ஃபெஷன்ஸ் ஆஃப் எ கிராப் டிரைவர்’ (Confessions Of A Grab Driver) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்திவரும் தனியார் வாடகைக் கார் ஓட்டுநரான ஒர்டெகா தம்மைப் போன்ற கிராப் ஓட்டுநர்களும் அத்தகைய சூழலை எதிர்கொண்டதாகப் பகிர்ந்துகொண்டார்.
கடந்த மாதம் 26ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் அவர் பதிவேற்றிய பதிவைப் பிடித்திருப்பதாக 11,800 பேர் குறிப்பிட்டனர். டிக்டாக்கில் அதே பதிவு 203,000க்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர்கள் கூரைகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது, தெருக்களைச் சுத்தப்படுத்துவது, இரவு நேர சாலைச் சுரங்கப் பராமரிப்புகளில் ஈடுபடுவது ஆகிய காட்சிகள் காணொளியில் இடம்பெற்றிருந்தன.
கடந்த மாத நடுப்பகுதியில் அடுக்குமாடிக் கட்டடங்களின் கீழ்த்தளங்களில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த சில வெளிநாட்டு ஊழியர்களை ஆடவர் ஒருவர் வசைபாடும் காணொளி சமூக ஊடகத்தில் பரவியது.
“இது உங்கள் தாத்தாவின் இடம் அல்ல. நீங்கள் செய்வது சரியல்ல,” என்று சொல்லிச் செல்லும் ஆடவர் ‘நீங்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்’ என்று சாடினார்.

