சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்த விகிதம் சற்று கூடியது. இருப்பினும், கடந்த பத்தாண்டுடன் ஒப்புநோக்க அந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாக அதிகாரத்துவப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
சிங்கப்பூரில் 2024ஆம் ஆண்டு 12 தாய்மார் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றனர். 2017ஆம் ஆண்டுக்குப் பின் பதிவான ஆக அதிக எண்ணிக்கை அது.
2023ஆம் ஆண்டு எட்டு முறை ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தனர். 2022ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை ஆறாக இருந்தது.
ஒரே பிரசவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறப்பதற்கான விகிதம் குறைந்ததற்கு செயற்கைக் கருத்தரிப்பின்போது ஒரே ஒரு கருமுட்டையை மட்டுமே தம்பதிகள் மாற்றுவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தனர்.
இனப்பெருக்கக் காலத்தின்போது இத்தனை கருமுட்டைகளைத்தான் செலுத்த முடியும் என்ற வரையறை இருப்பதும் மற்றொரு காரணம் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
2015ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டுவரை 86 முறை ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தன. அதற்கு முந்தைய பத்தாண்டில், அதாவது, 2005ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை 177 முறை ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தன.
1994லிருந்து கடந்த ஆண்டு வரை 13 முறை ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. கடைசியாக 2012ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தனர்.
இருப்பினும், சிங்கப்பூரில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது வழக்கமான ஒன்றாக நீடிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
2015ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு வரை மொத்தம் 5,161 இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. 2005ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டுவரை பிறந்த 5,066 இரட்டை குழந்தைகளைவிட அது அதிகம்.
இதற்கு முன்னர் கருத்தரிக்கும் சாத்தியத்தை அதிகரிக்க மருத்துவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கருமுட்டைகளைச் செயற்கைக் கருத்தரிப்பு முறை மூலம் செலுத்தினர்.
தற்போது தம்பதிகள் ஒரே ஒரு கருமுட்டையை மட்டும் கருப்பையில் செலுத்தும்படி கேட்டுக்கொள்வதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தனர்.
அவ்வாறு செய்யும்போது கருத்தரிப்பு விகிதம் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாக இருக்கும்.