தமிழ் முரசின் செழுமைமிக்க வரலாற்றை எடுத்துரைக்கும் எட்டு வண்ணப் பதாகைகள் கொண்ட கண்காட்சி ‘தமிழ் முரசு 90ஆம் ஆண்டுநிறைவு’ நிகழ்ச்சியின் வரவேற்புப் பகுதிக்கு அருகே அமைக்கப்பட்டிருந்தது.
தொடக்ககால தமிழ் முரசு அலுவலர்கள், தமிழ் முரசின் அலுவலகமாகச் செயல்பட்ட அன்றைய தமிழர் சீர்திருத்தச் சங்கம் ஆகியவற்றின் படங்களைக் கொண்டது ஒரு பதாகை.
மற்றொன்றில், சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்ததை முழங்கும் தலைப்புகளைக் கொண்ட பெரும் பக்கங்கள்.
சிறு வயது முதல் தமிழ் முரசை விரும்பிப் படித்ததாகக் கூறும் பேருந்து ஓட்டுநரும் இலக்கிய ஆர்வலருமான வீ. தமிழ்மறையான், 70, கண்காட்சியைக் கண்டு பூரிப்படைவதாகத் தெரிவித்தார்.
“முதல் பக்கத்தில் இடம்பெறும் தமிழ் முரசு என்ற பெரிய சொற்களின் வெவ்வேறு தோற்றங்களை இந்தக் கண்காட்சியில் கண்டு ரசித்தேன். பத்திரிகையில் இணைந்துள்ள வடிவமைப்பாளர்களையும் ஓவியர்களையும் அங்கீகரிக்கும் விதமாக இது உள்ளது,” என்று அவர் கூறினார்.
அக்காலத் தமிழர்களின் வாழ்வின் கண்ணாடிகளாக இந்தப் பதாகைகள் தமக்குத் தோற்றமளிப்பதாக வரலாற்று ஆய்வாளர் முனைவர் தெரேசா தேவசகாயம் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை ‘ஃபேர்மோன்ட் சிங்கப்பூர்’ ஹோட்டலில் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ள இந்தக் கண்காட்சி, திங்கட்கிழமை (ஜூலை 7) முதல் ஜூலை 21ஆம் தேதி வரை இந்திய மரபுடைமை நிலையத்தில் வைக்கப்படிருக்கும்.
ஜூலை 22ஆம் தேதி முதல் ஜூலை 30ஆம் தேதி வரை அக்கண்காட்சி உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் இடம்பெறும்.
தொடர்புடைய செய்திகள்
பின்னர் ஜூரோங் வட்டார நூலகத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை அமைந்திருக்கும்.