இஸ்தானா அருகே சட்டவிரோதமாக பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தரும் வகையில் ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மூவர் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) அக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
அண்ணாமலை கோகிலா பார்வதி 37, மோசமாத் சோபிகுன் நாகர் 26, சித்தி அமீரா முகம்மது அஸ்ரோரி, 30 ஆகியோர் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி இஸ்தானா அருகே பேரணிக்கு ஏற்பாடு செய்ததாகப் பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
இஸ்தானாவுக்குக் கடிதங்களை வழங்க அவர்கள் நடந்து சென்ற பொதுப் பாதை தடைசெய்யப்பட்ட பகுதி என்பது தங்களுக்குத் தெரியாது என்ற நேர்மையான நியாயத்தை அவர்கள் வெளிப்படுத்தியதாக மாவட்ட நீதிபதி திரு ஜான் இங் கூறினார்.
கோகிலா பார்வதியின் உதவியுடன் சோபிகுன், அமீரா இருவரும் ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்ததை அரசுத்தரப்பு மெய்ப்பித்தாலும், தடைசெய்யப்பட்ட பகுதியில் ஊர்வலம் ஏற்பாடு செய்கிறோம் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர் என்பதை மெய்ப்பிக்கத் தவறிவிட்டதாக அவர் கூறினார்.
பிளாசா சிங்கப்பூராவிலிருந்து இஸ்தானாவுக்குச் செல்லும் பாதை பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட பகுதி என்பது அந்தப் பெண்களுக்குத் தெரியாது என்று கூறிய நீதிபதி, அதனைக் குறிப்பிட அங்கு அறிவிப்போ, குறிப்புகளோ இல்லை என்றார்.