இளம் பயனீட்டாளர்களுக்கு மின்னிலக்கத் தளங்களைப் பாதுகாப்பானதாக்க சமூக ஊடகத் தளங்களுடன் இணைந்து அர்த்தமுள்ள வழிகளை நாட அரசாங்கம் முற்பட்டுள்ளதாகத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறியுள்ளார்.
பயனீட்டாளர்களின் வயதுக்கு ஏற்ற உள்ளடக்கங்களைச் சமூக ஊடகங்கள் தருவதற்கான அணுகுமுறை ஆராயப்படுவதாகக் கூறிய திருவாட்டி டியோ, “பிள்ளைகள் செல்லக்கூடிய கட்டுப்பாடற்றத் தளங்கள் எப்போதும் இருக்கவே செய்கின்றன. எனவே, சமூக ஊடகங்களில் உள்ள அனைத்தும் அனைவருக்குமானது என்று சொல்லிவிட முடியாது,”என்றார்.
கைப்பேசிகளில் உள்ள ‘ஆப் ஸ்டோர்’ தளத்தில் வயது வரம்பை அடிப்படையாகக் கொண்டு செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் நடைமுறை நடப்பில் உள்ளது. அதைச் சமூக ஊடகத் தளங்களுக்கு விரிவுபடுத்துவது குறித்து தமது அமைச்சு ஆராய்வதாகத் திருவாட்டி டியோ இவ்வாண்டு மார்ச் மாதம் கூறியிருந்தார்.
கடன் அட்டைகள், சிங்பாஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தி வயது வரம்பைக் கண்டறியும் நடைமுறை செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் ‘ஏப் ஸ்டோர்’ தளங்களில் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் செயல்படுத்தப்படும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு குறிப்பிட்டது.
‘ஏப் ஸ்டோர்’ தளத்தைப் பயன்படுத்த கடன் அட்டை அல்லது சிங்பாஸ் விவரங்களைப் பதிவிடுவது கட்டாயமாக்கப்படும். அதன் மூலம் 18 வயதுக்குக் குறைவான பயனீட்டாளர்கள் வயது வரம்புக்கு மீறிய செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய முடியாது என்று அமைச்சின் பேச்சாளர் சொன்னார்.