சாங்கி விமான நிலையம் அருகே நான்கு கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டு விபத்தில் சிக்கின. இதன் காரணமாக இரண்டு ஆடவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்துச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) நிகழ்ந்தது.
சாங்கி விமான நிலையம் நோக்கிச் செல்லும் ஏர்போர்ட் போல்வார்ட் சாலையில் நான்கு கார்கள் விபத்தில் சிக்கியதாகத் தங்களுக்கு இரவு 9.05 மணிவாக்கில் தகவல் வந்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.
57 வயது ஓட்டுநரும் 30 வயது பயணியும் சாங்கி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர், அவர்கள் சுயநினைவுடன் இருந்தனர் என்று அதிகாரிகள் கூறினர்.
விபத்து தொடர்பான படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. அதில் ஒரு காரின் பின்பகுதி கடுமையாகச் சேதமடைந்திருந்தது. சற்று தூரத்தில் நிற்கும் மற்றொரு காரின் பின்பகுதியும் சேதமடைந்திருந்ததைப் பார்க்க முடிந்தது.
மேலும் சம்பவ இடத்தில் காவல்துறையின் கார் மற்றும் தற்காப்புப் படையின் அவசர உதவி வாகனம் இருப்பதையும் பார்க்க முடிந்தது.
விபத்து தொடர்பாகக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

