ஜூரோங் வெஸ்டில் இருக்கும் வீடமைப்பு வளர்ச்சி கழக குடியிருப்பு ஒன்றின் 13வது தளத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அக்டோபர் 14ஆம் தேதி, புளோக் 675A ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 64ல் ஏற்பட்ட இவ்விபத்து குறித்து தங்களுக்கு அன்றைய தினம் மாலை 5.40 மணிக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
அந்தக் குடியிருப்பில் இருக்கும் சமையலறையில் அச்சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்ட குடியிருப்புக்கு விரைந்தபோது, அதன் சமையலறையில் தீக்கொழுந்துவிட்டு எரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
குழாய்கள்மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துத் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இங் தெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு இருவர் அழைத்துச் செல்லப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சமையல் அல்லது பொருள்களைச் சூடேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும்போது அதைக் கவனிக்காமல் அப்படியே விட்டுவிடக் கூடாது என்றும் பயன்பாட்டில் இல்லாத எரிவாயு அல்லது மின்சாதனங்களை அணைக்க வேண்டும் என்றும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை பொதுமக்களுக்கு நினைவூட்டியது.