சட்ட விரோதமாகப் பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்திய ஒரு பெண்ணுக்கு $7,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பணிப்பெண் பகுதி நேரமாக வீட்டைச் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார்.
பணிப்பெண்ணின் வேலை அனுமதி அட்டை, அவரின் அதிகாரத்துவ முதலாளிக்கு வேலை செய்ய மட்டுமே அவரை அனுமதிக்கிறது.
பிலிப்பீன்சைச் சேர்ந்த 53 வயது பிடோ எர்லிண்டா ஒக்காம்ப்போ, 64 வயது சிங்கப்பூரர் சோ ஓய் பெக்கிற்குக் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் பகுதி நேரமாகத் துப்புரவுப் பணிகளைச் செய்துகொடுத்தார். வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தை மீறிய உத்தேசச் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து மனிதவள அமைச்சு சென்ற ஆண்டு (2024) டிசம்பர் மாதம் விசாரணையைத் தொடங்கியது.
நீதிமன்றம் சோவுக்கு $7,000 அபராதம் விதித்தது. எர்லிண்டாவுக்கு $13,000 அபராதம் விதிக்கப்பட்டது. சோவின் பரிந்துரைப்படி சட்டத்துக்குப் புறம்பாக இன்னொருவருக்கும் வேலை செய்ததால் அவர் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. புலக் பிரசாத் என்பவரின் வேலையிடத்தில் எர்லிண்டா சுமார் ஆறு மாதத்திற்குச் சுத்தம் செய்யும் வேலையைச் செய்தார்.
சோவும் எர்லிண்டாவும் அபராதத் தொகையைச் செலுத்திவிட்டனர்.
பிரசாத்திற்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.