மத்திய விரைவுச்சாலையில் திங்கட்கிழமை (ஜூன் 9) நிகழ்ந்த பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் சிக்கியவர்களில் இருவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
சின் சுவீ சாலை வெளிவாயிலுக்கு முன்பு சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச்செல்லும் மத்திய விரைவுச்சாலையில் நிகழ்ந்த விபத்து குறித்து காலை 9 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இந்த விபத்தில் ஒரு கார், டிரக், லாரி ஆகியவை சம்பந்தப்பட்டதாகக் காவல்துறை கூறியது.
விபத்தில் காயமுற்ற 41 வயது கார் ஓட்டுநரும் 36 வயது கார் பயணியும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.
மூன்றாமவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
லாரியை ஓட்டிய 26 வயது ஆடவர், இந்த விபத்து குறித்து காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகிறார்.

