இஸ்தானா அதிபர் மாளிகை, தீபாவளிக் கொண்டாட்டத்தையொட்டி வரும் நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி காலை 8.30 மணி முதல் மாலை ஆறு மணி வரை பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்.
பாரம்பரியக் கலைகள், கலாசாரப் படைப்புகளிலிருந்து நவீனப் பயிலரங்குகள் வரை பொதுமக்களுக்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தோரணங்கள் அமைப்பது, தீப அலங்காரம், ரங்கோலி போன்ற பல்வேறு வண்ணமயமான நடவடிக்கைகள் இஸ்தானா வளாகத்தில் நவம்பர் ஒன்பதாம் தேதி நடைபெறும்.
அன்று காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரை படைப்புகள் இடம்பெறும். தமிழ் இசை, கலாமஞ்சரி பள்ளியின் பரதநாட்டிய நடனப் படைப்பு, ஸ்ரீ வாரிசான் பள்ளி வழங்கும் பார்வையாளர்களையும் ஈடுபடுத்தும் (interactive) நடனப் படைப்பு எனப் பல அங்கங்கள் இஸ்தானா தீபாவளிக் கொண்டாட்டத்தில் இடம்பெறும்.
வருகையாளர்கள் இஸ்தானாவின் வளாகத்தைக் கண்டு களிக்கலாம். இஸ்தானா கட்டட அமைப்பு, அங்குள்ள மலர் வகைகள் உள்ளிட்டவற்றை வருகையாளர்கள் பார்த்து ரசிக்கலாம்.
இஸ்தானா வருகையாளர்களிடமிடருந்து நுழைவுக் கட்டணம், சுற்றுலாக்கள் மூலம் ஈட்டப்படும் தொகை அதிபர் சவால் ஆதரிக்கும் நன்கொடை அமைப்புகளுக்கு வழங்கப்படும்.
மேல்விவரங்களை இஸ்தானாவின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

