இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் தனியார் வீட்டு விலை அதிகரிப்பு தொடர்ந்து மெதுவடைந்து வருவதாக நகர மறுசீரமைப்பு ஆணையம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 1) தெரிவித்தது.
இரண்டாம் காலாண்டில் தனியார் வீட்டு விலைக் குறியீடு 0.5 விழுக்காடு உயர்ந்தது.
முதல் காலாண்டில் அது 0.8 விழுக்காடு ஏற்றம் கண்டிருந்தது.
அதுமட்டுமல்லாது, காலாண்டு அடிப்படையில், இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் தனியார் வீடுகளின் விற்பனை 40 விழுக்காடு சரிந்தது என்று ஆணையம் கூறியது.
இரண்டாம் காலாண்டில் 4,340 தனியார் வீடுகள் விற்கப்பட்டன. ஒப்புநோக்க, முதல் காலாண்டில் 7,261 தனியார் வீடுகள் விற்கப்பட்டன.
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் சிங்கப்பூரெங்கும் பல பகுதிகளில் தனியார் அடுக்குமாடி வீடுகளின் விலை 0.5 விழுக்காடு அதிகரித்தது. முதல் காலாண்டில் அது 1 விழுக்காடு ஏற்றம் கண்டிருந்தது.
மத்திய வட்டாரத்தின் மையப் பகுதியில் தனியார் அடுக்குமாடி வீடுகளின் விலை இரண்டாம் காலாண்டில் 2.3 விழுக்காடு உயர்ந்தது. முதல் காலாண்டில் அது 0.8 விழுக்காடு அதிகரித்திருந்தது.
மத்திய வட்டாரத்தில் உள்ள மற்ற பகுதிகளில் உள்ள தனியார் அடுக்குமாடி வீடுகளின் விலை இரண்டாம் காலாண்டில் 1.1 விழுக்காடு குறைந்தது. முதல் காலாண்டில் அது 1.7 விழுக்காடு அதிகரித்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
மத்திய வட்டாரத்துக்கு வெளியே உள்ள பகுதிகளில் தனியார் அடுக்குமாடி வீடுகளின் விலை இரண்டாம் காலாண்டில் 0.9 விழுக்காடு அதிகரித்தது.
முதல் காலாண்டில் அது 0.3 விழுக்காடு ஏற்றம் கண்டிருந்தது.
தனியார் தரைவீடுகளின் விலை இரண்டாம் காலாண்டில் 0.7 விழுக்காடு அதிகரித்தது. முதல் காலாண்டில் அது 0.4 விழுக்காடு ஏற்றம் கண்டிருந்தது.