மே தினத்தன்று காலையில் ‘ஆக்டிவ் ஃபையர்’ நிறுவனம், வெளிநாட்டு ஊழியர்களுக்காக இரண்டாம் ஆண்டாக ஒற்றுமை கிண்ணப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்தது.
வெளிநாட்டு ஊழியர் நிலையம், ‘ஃபோர்ட்டிஸ்’, ‘ஃபியூஷன் சேஃப்டி’ ஆகியவற்றின் ஆதரவோடு போட்டிகள் சூன் லீ பொழுதுபோக்கு மையத்தில் நடைபெற்றன.
இவ்வாண்டு கிரிக்கெட்டோடு புதிதாக ‘ஃபுட்சல்’ காற்பந்துப் போட்டிகளும் இடம்பெற்றன.
போட்டிகளில் பங்கேற்றோர் பெரும்பாலும் ‘ஆக்டிவ் ஃபையர்’ மற்றும் அதன் பங்காளித்துவ நிறுவனங்களின் வெளிநாட்டு ஊழியர்களே. காற்பந்தில் மற்ற காற்பந்து அணிகளும் பங்குபெற்றன.
வெளிநாட்டு ஊழியர்களை வேலையிடப் பாதுகாப்பில் தலைமைத்துவம் காண்பிக்க ஊக்குவிக்கும் ‘ஃபியூஷன் சேஃப்டி’யின் ‘ஹீரோகோட்’ எனும் இயக்கத்தை ஏற்று ‘ஆக்டிவ் ஃபையர்’ இப்போட்டிகளை நடத்துகிறது.
அதனால், போட்டிகளின் தொடக்கத்தில், ‘வேலையிடப் பாதுகாப்பைக் கடைப்பிடிப்போம்’ என்ற உறுதிமொழியை வெளிநாட்டு ஊழியர்களும் நிறுவனங்களின் நிர்வாகக் குழுவினரும் எடுத்தனர். உறுதிமொழிப் பதாகையில் கையெழுத்தும் இட்டனர்.
கிரிக்கெட்டில் இரு அணிகளுக்கிடையே ஓர் ஆட்டம் நடைபெற்றது. ஆறு ஓவர்களில் 32 ஓட்டங்கள் எடுத்த ‘டெக்னிக்ஸ்’ அணி, ‘ஆக்டிவ் ஃபையர்’ அணியை ஓர் ஓட்ட வித்தியாசத்தில் வென்றது.
“தொழிலாளர்களுக்கு இப்போட்டிகள் மே தினத்தன்று பெருமகிழ்ச்சியளித்தன. அடுத்த ஆண்டு கூடுதல் அணிகளோடு கூடுதல் ஆட்டங்களை விளையாட விரும்புகிறோம், என்றார் ‘டெக்னிக்ஸ்’ அணித் தலைவர் லியோ டி சோசா, 42.
‘ஃபுட்சல்’ காற்பந்துப் போட்டியில் வென்றது ‘ஆக்டிவ் ஃபையர்’ பொறியாளர்கள் தொடங்கிய ‘மேமத்’ அணி.
முதல் பரிசாக $500, இரண்டாம் பரிசாக $300 மதிப்புள்ள ‘என்டியுசி’ பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. போட்டியாளர்கள் அனைவருக்கும் $7 உணவுப் பற்றுச்சீட்டுகளும் கொடுக்கப்பட்டன.
இந்தியா, பங்ளாதேஷிலுள்ள பள்ளிகளுக்கான நிதி திரட்டலும் நடைபெற்றது. வெளிநாட்டு ஊழியர்கள், நிறுவனத்தாரின் நன்கொடைகளால் சுமார் $3,000 திரட்டப்பட்டதாகக் கூறினார் ‘ஆக்டிவ் ஃபையர்’ இயக்குநரும் போட்டி ஏற்பாட்டாளருமான ராமலிங்கம் வடிவேல்.