‘அன்லாக்கிங் ஏடிஎச்டி’ (Unlocking ADHD) அறக்கொடை, சமூக சேவை நிறுவனம், ‘பிபிடிஓ சிங்கப்பூர்’ நிறுவனத்தின் புத்தாக்கத் தலைவரும், அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் பெங்குவின் பதிப்பகத்தின் ‘கொலைட்’ (Collide) புத்தகத்தின் ஆசிரியருமான டே குவான் ஹின் இணைந்து ‘வேர் ஆர்ட் அண்ட் ஏடிஎச்டி கொலைட்’ (Where Art and ADHD Collide) எனும் புதுமையான நிகழ்ச்சியை அண்மையில் அரங்கேற்றினார்கள்.
இந்நிகழ்வு சிங்கப்பூரின் ‘ஆர்ட்டிடியூட்’ கலைக்கூடத்தில் நடைபெற்றது. இந்த தனிச்சிறப்புமிக்க நிகழ்வானது புத்தாக்கம், பன்முகத்தன்மை ஆகியவற்றுடன், கலையும் மனநலனும் சங்கமித்த நிகழ்வை கொண்டாடியது.
ஏப்ரல் 22ஆம் தேதியன்று நடைபெற்ற இந்நிகழ்வில் சிங்கப்பூர் சுகாதாரச் சேவைகளின் புத்தாக்கம், உருமாற்றப் பிரிவின் குழுத்தலைவர் லீ சென் யீ பங்கேற்றுச் சிறப்பித்தார். புத்தாக்கத்தைப் பயன்படுத்தி மனநலனை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாக அமைந்தது அவரது வருகை.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ‘அன்லாக்கிங் ஏடிஎச்டி’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மூன்லேக், கவனக்குறை மிகைச்சுறுதி குறைபாடு எனப்படும் ‘ஏடிஎச்டி’ பற்றிய பயனுள்ள கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
கவனக்குறை மிகைச்சுறுதி பாதிப்புக்குள்ளானோரும் அவர்தம் குடும்பத்தினரும் தங்களது வாழ்வை, நிறைவாக வாழ்வதற்கு வலிமை சேர்க்கும் நிறுவனமாகத் திகழ்கிறது ‘அன்லாக்கிங் ஏடிஎச்டி’ அறக்கொடை, சமூக சேவை நிறுவனம்.
தனிச்சிறப்புமிக்க ‘ஏடிஎச்டி’ கலைஞர்கள் ஒன்றுகூடிய இந்நிகழ்வில் காய் என பிரியமுடன் அழைக்கப்படும் கய்டமா டி.சன் பங்கேற்றார். இவர் இசைக்கோல் கொண்டு, எழுத்தின் லயத்திற்கு இசைந்திடும் வகையில் கலைப்படைப்பை உருவாக்கிய ஒரேயொரு சிங்கப்பூர்க் கலைஞர் எனும் பெருமைக்குச் சொந்தக்காரர்.
ஒரே நேரத்தில் இரு கைகளாலும் இவர் உருவாக்கிய தலைசிறந்த கலைப்படைப்புகள், இவரின் தனித்துவமிக்க திறன்களைக் காட்சிப்படுத்தியதுடன் சிங்கப்பூரின் முதல் நேரலை ஓவியத்தை அவர் தீட்டியதையும் நேரடியாக காணச்செய்தது. இந்த ஓவியப் படைப்பு ‘ரிதமிக் டான்ஸ் ஆஃப் கெயோஸ்’ என்று அழைக்கப்படுகிறது.
“வாழ்வின் வெவ்வேறு சூழல்கள், பல்வேறு பணிகள், தொழில்துறைகள் சார்ந்த பலதரப்பினரை, நரம்பியல் பன்முகத்தன்மையினைச் சகித்துக்கொள்ளுதல், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அதனைக் கொண்டாடுதல் போன்ற பொதுவான நோக்கங்களுக்காக வழிநடத்துவதைக் காண்பது மிகவும் சிறப்பாக உள்ளது,” என்று தெரிவித்தார் திரு லீ.