சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் திருமதி தமிழ்ச்செல்வி இராஜராஜனின் ‘காற்றலையில்’ நூல் அறிமுக விழா, ஆகஸ்ட் 19ஆம் தேதி தேசிய நூலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் நெறியாளரும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலவை உறுப்பினருமான திருமதி பிரதீபா வீரபாண்டியன், தமிழைப்பற்றிய இனிய கவிதையுடன் விழாவைத் தொடங்கி வைத்தார்.
‘புத்தகங்கள் வாழ்வுக்கு ஒளியாகத் திகழ்கின்றன’ என்று வரவேற்புரை ஆற்றிய, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலாளர் திருமதி பிரேமா மகாலிங்கம் கூறினார்.
தலைமை உரை ஆற்றிய சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன், கதைக்களத்தில் சிறுகதை எழுதத் தொடங்கிய திருமதி தமிழ்ச்செல்வியின் எழுத்துப் பயணம் பற்றி குறிப்பிட்டார். கதைக்களத்தில் எழுதியவர்கள் எழுத்தாளர்களாக வலம் வருவதைக் கண்டு கழகமும் தாமும் பெருமிதம்கொள்வதாக அவர் கூறினார்.
தமிழார்வலர்களான திரு. உமாசங்கர் நாராயணனும் திரு. தியாகராஜன் நடராஜனும் ‘கதை கேட்போமா?’ என்ற அங்கத்தைப் படைத்தனர். ‘காற்றலையில்’ நூலில் மறதி நோயுள்ள ஒருவரை மையப்படுத்தியுள்ள ‘மெரூன் கலர் கட்டடம்’ என்ற சிறுகதை பற்றி இருவரும் சுவையாக எடுத்துரைத்தனர்.
நூலறிமுகம் செய்த திரு. இராம வயிரவன், வித்தியாசமான கதைக்களம், வெவ்வேறு கோணங்களில் கதை சொல்லும் பாணி, கதையோடு இணைந்த நகைச்சுவை ஆகியவை ‘காற்றலையில்’ நூலை சிறந்த நூலாகக் காட்டுவதாகக் கூறினார்.
நூலறிமுகம் செய்த மற்றொருவரான கவிமாலை தலைவர் திருமதி இன்பா, சிங்கப்பூரில் ஒரு காலக்கட்டத்தில் பெண் படைப்பாளர்களின் எண்ணிக்கை அருகி இருந்ததாகவும் கடந்த சில ஆண்டுகளில் ஆண் படைப்பாளர்களைவிட பெண் படைப்பாளர்கள் அதிகரித்திருப்பதாகவும் கூறினார்.
வாழ்த்துரையில், ‘திரவ நிலை’, ‘பெண்ணானவள்’ ஆகிய இரு சிறுகதைகள் பற்றிப் பேசிய மக்கள் மனம் இதழாசிரியர், கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, உணர்வுகளை மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டக்கூடியவை தமிழ்ச்செல்வியின் சிறுகதைகள் என்றார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழர் பேரவைத் தலைவர் திரு. வெ. பாண்டியன், தமக்கு முன் பேசியவர்கள் கூறியதைக் கேட்டதிலிருந்து, நூலை வாங்கி உடனே படிக்க வேண்டுமென்ற ஆவல் பிறந்துள்ளதாகக் கூறினார்.
ஏற்புரையும் நன்றியுரையும் ஆற்றிய நூலாசிரியர், ‘காற்றலையில்’ நூல் உருவாகிய தருணத்தைப் பகிர்ந்துகொண்டார். கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி கோட்டூருக்கு அருகிலுள்ள மன்னார்குடியில் பாவலர் அறிவுமதி அவர்களால் நூல் வெளியீடு கண்டதை குறிப்பிட்டார். தனது முதல் நூல் தமது அய்யாவின் நூற்றாண்டு விழாவில் வெளியிட வேண்டும் என்று உடன் பிறந்தவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தன்னை எழுத்தாளராக அடையாளப்படுத்திய சிங்கப்பூரில் நூலை வெளியிடாமல் இந்தியாவில் வெளியிட்டதன் காரணத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்.
தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் திரு. மு. ஹரிகிருஷ்ணன் முதல் நூலைப் பெற்றுக்கொள்ள, அடுத்தடுத்து மற்றவர்களும் நூலைப் பெற்றுக்கொண்டனர்.